Monday, July 4, 2016

மாந்திரீக பாடம் 8

அஷ்ட கர்மங்கள் :

அஷ்ட கர்மாக்களை என்னெவென்று பார்க்கு முன் அதனைப் பற்றிய முழுவிளக்கம் அவசியமாகின்றது , காரணம் ஒரு பயிற்சியின் அல்லது படிப்பின் அவசியமும் , காரணமும் , வரலாறும் தெரிந்தால் அதனை கற்றுக்கொள்ள ஆர்வமும் , கற்றுக் கொண்டே தீரவேண்டும் என்கிற உத்வேகமும் நம்முள் இயல்பாக உருவாகும்.

இப்போது கர்மாக்களை தெரிந்துகொள்ள துவங்குவோம் .

ஒன்று என்பது பிரதமை என்றும்
இரண்டு என்பது துதியை என்றும்
மூன்று என்பது திரிதியை என்றும்
நான்கு என்பது சதுர்த்தி என்றும்
ஐந்து என்பது பஞ்சமி என்றும்
ஆறு என்பது சஷ்டி என்றும்
ஏழு என்பது சப்தமி என்றும்
எட்டு என்பது அஷ்டமி என்றும்
ஒன்பது என்பது நவமி என்றும்
பத்து என்பது தசமி என்றும்
பதினொன்று என்பது ஏகாதசி என்றும்
பனிரெண்டு என்பது துவாதசி என்றும்
பதிமூன்று என்பது திரயோதசி என்றும்
பதினான்கு என்பது சதுர்த்தசி என்றும்
பதினைந்து என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாகவே அமாவாசை ஆண்களையும் , பௌர்ணமி பெண்களையும் அதிகம் தொடர்பு கொண்டுள்ளதாக அறிகிறோம்.
பௌர்ணமியில் நீர்நிலைகளில் பௌர்ணமியின் (குளுமை)ஆதிக்கம் அதிகம் இருப்பதை எல்லோரும் சாதாரணமாக காணலாம் .
அமாவாசை காலங்களில் பெரும்பாலும் மனஅமைதியற்ற(இறுக்கமான)சூழல் காணப்படுவதுண்டு.

ஆனால் ஒரு சில பூஜைக்குரிய துவக்கத்தினை சிலர் இந்நாளில் (அமாவாசையில்) துவக்குவதுண்டு .
இந்த யோகம் தனை ஆண் பெண் என பாகுபாடின்றி யாரும் பயில முடியும் , இதில் ஆணிலும் விட பெண்கள் மிக விரைவாக முன்னேற்றமும் உயர்நிலையை அடைகின்றார்கள் என்பது அனுபவ உண்மை.

காரணம் பெண்கள் இயல்பாகவே பிராண சக்தியின் வடிவமாக உள்ளதுதான். அதனால் அவர்கள் முயன்றால் போதும், அந்த உயர்நிலை அவர்களை தேடி வந்து அடைந்து விடுகிறது .

சரி கர்மாகளுக்கு வருவோம் .   
இந்த கர்மாக்கள் எட்டு என்கிற எண்ணிக்கையில் இருப்பதால் இதனை அஷ்ட கர்மா (எட்டு தொழில்) என்றழைக்கிறோம்.
இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது . இந்த கர்மாக்களை மிகவும் சிரத்தையாகவும் உள்ளார்ந்த உத்வேகத்தோடும் பயிலுவோர் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் நிலையினை அடைகிறார்கள் என்கிறார் இறைவனார் .

இவ்வளவு சிறப்பினையும் ஒருங்கே பெற்ற இந்த அஷ்டமா சக்திகளின் ஒரு பகுதியான அஷ்ட கர்மாக்கள் என்பது முறையே ,
1. வசியம்
2. மோகனம்
3. உச்சாடனம்
4. ஸ்தம்பனம்
5. ஆகர்ஷனம்
6. வித்துவேடனம்
7. பேதனம்
8. மாரணம்            என்பது ஆகும்

இந்த அஷ்ட கர்மாக்களின் சக்தி மிகுந்த செயல்பாடுகள் என்னென்று பார்ப்போம் .
1. வசியம் என்றால், ஆகர்ஷனம் , மோகனம் , வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும்.
 ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது – மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.

2. மோகனம் என்றால், மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.

3. உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .

4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம். 

5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.  

6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை , தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள் , தீய பழக்கங்கள் போன்றவை )

7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது .
அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது தொழில் எனப்படுகிறது.
  
 ================================================

No comments:

Post a Comment