Monday, July 4, 2016

மாந்திரீக பாடம் 7

அஷ்டமாசக்திகளை தரும் மூலிகைகள் , மந்திரங்கள் , திசைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

மூலிகையும் மந்த்ரமும் என்னவென்று அறியும் முன் நாம் யோகம் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது ,
ஆகவே இந்த பதிவினில் யோகம் பற்றிய முக்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் .

யோகமும் , மூலிகையும் , மந்த்ரமும் என்னவென்று பார்ப்போம் .

முதலில் யோகம் . . .

மனித வாழ்வினில் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நன்மைகள் பெருகி வருவதை நாம் யோகம் என்கிறோம் , காரணம் , நமது எண்ணங்களுக்கும் , செயல்பாட்டிற்கும் மேல் அதிகமாக நன்மைகள் கிடைப்பதால் அதனை நாம் யோகம் என்று சிறப்பித்து கூறுகிறோம்.

ஆனால் இப்போது நாம் சொல்ல இருக்கும் இந்த யோகம் என்பது , மண்ணில் மண்ணாக மறையப்போகும் இந்த மனித உடல், ஒரு பெரிய சாதனையை செய்து , இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ள , வாழ்வதற்கு வர இருக்கின்ற, மனித உயிர்கள் தன்நிலையில் இருந்து உய்யும் பொருட்டு மகரிஷிகளாலும் , யோகிகளாலும் , சித்தர் பெருமக்களாலும் நமக்கு அருளப்பட்டதாகும் .

இந்த யோகம் எதிர்பாராமல் வருவதல்ல , எதிர்பாராமல் வரும் யோகமானது , நமது வாழ்நாளில் வரலாம் , வராமலும் போகலாம்.

ஆனால் இந்த யோகத்தினை பயிற்சியின் வாயிலாக நமக்கு நாமே பெற்றுக் கொள்ளலாம். அதுதான் இந்த யோகத்தின் தனித்தன்மையும் பெருமையுமாகும்.

இதனால் வருகின்ற யோகமானது , எப்பிறப்பிலும் நமது துணையாவதாகும்.
இந்த பயிற்சியினை வாசி யோகம் என்றும், ப்ராணாயாமம் என்றும் , மூச்சு பயிற்சி என்றும் கூறுவார்கள் . ஆனால் மனிதனை தெய்வ நிலை காணச் செய்வதால் இந்த பயிற்சியினை தெய்வநிலை யோகப் பயிற்சி என்பதே சரியாகும்.

இந்த யோகத்திற்கான பயிற்சிக்கு நேரம் காலமும் , உணவு முறையும் மிகவும் முக்யமானதாகும் .

இந்த யோகப்பயிற்சியை முறைப்படுத்தி பூலோக வாசிகளுக்கு அருட்கொடையாக அருளியவர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் ஆவார்கள்.

சாட்சாத் எம்பெருமான் ஆனவர் ஸ்ரீ ஸ்ரீ பார்வதி தேவிக்கு யோகத்தின் அதி சூட்சுமத்தை மனமுவந்து அருளி , தேவியானவர் அதனை பதஞ்சலிக்கும் , வியாக்ரபாதருக்கு அருள்பாலித்து , அதன்பின்னர் அவர்கள் இதற்கு வடிவம் தந்து , பின் அவர்களிடமிருந்து பணிந்து இதனைப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் இதற்கு உரிய பாடல்களையும் , பயிற்சியையும் வகுத்து மனிதர்களின் மேன்மை கருதி உலகறிய அருள் செய்தார்கள் .

பின்னாளில் வந்த பெருமைக்குரிய யோகிகளும் , சித்தர்களும் மனித ஜீவர்கள் பால் பேரன்பு கொண்டு தந்த , சிறப்பு மிக்க அந்த பயிற்சி முறையை எல்லோரும் முறையாக மேற்கொண்டால் வாழ்வில் எல்லா நலமும் , வளமும் அமைதியும், ஆனந்தமும் பெறலாம் .       

யோகப் பயிற்சிக்கு உரிய நேரம் என்னவென்று பார்ப்போம்.

24 நிமிடங்கள் என்பது ஒரு நாழிகை ஆகின்றது ,
2 ½ நாழிகை என்பது 1 மணி நேரம் .
நாளொன்றுக்கு 10 ஜாமம் .
5 ஜாமம் என்பது 12 மணி நேரமாகும் .
10 ஜாமம் என்பது 24 மணி நேரமாகும்
அப்படி என்றால் 24 மணியை ஜாமங்களாக பிரிக்கையில் 2 மணி 24 நிமிடங்கள் என்பது ஒரு ஜாமம் என்றாகின்றது.

முப்பது நாழிகைகளை 6 + 6 ஆக பிரித்தால் 5 ஆக பிரிக்கலாம்
பகற் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.
இராக் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.

இதில் பகல் முப்பது நாழிகையில், பூமியை ……..

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை     (6.00-8.24)    ஆகாயமும்
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    காற்றும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை  (1.12-3.36)     நீரும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை   (3.36-6.00)          நிலமும் ஆளுகின்றன.

இதில் இரவு  முப்பது நாழிகையில், பூமியை……..

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை    (6.00-8.24)     நிலமும்  
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    நீரும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை   (1.12-3.36)         காற்றும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை    (3.36-6.00)    ஆகாயமும் ஆளுகின்றன.
இதில் கதிரவன் உதயத்திற்கு முன் 6 நாழிகையும்

(*சுமாராக காலை 3-30 மணி முதல் 6.00 மணி வரையிலும்)
பின் 6 நாழிகையும் (*சுமாராக காலை 6-00 மணி முதல் 8.24 மணி வரையிலும்)
உள்ள காலமே யோகப் பயிற்சிக்கு உகந்ததாக ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் அருளுகின்றார்.

*(தினசரி சூரிய உதயம் கணித்து இந்த நேரத்தை முறையாக தேர்ந்தெடுக்கலாம்.)
திருமூலர் 3 ம் தந்திரம் , 16 வார சரத்தில்,
திங்கள் , புதன் , வெள்ளியில் மூச்சை இடைநாடி வழியாகவும் ,
செவ்வாய் , சனி , ஞாயிறில் மூச்சை வலது நாடி வழியாகவும் ,
வளர்பிறை வியாழனில்  மூச்சு இடை நாடியிலும்,
தேய்பிறை வியாழனில் மூச்சு வலது நாடியிலும் பயில வேண்டும் என்கிறார்.
மேலும்,

காலையில் யோகம் பயில கபம் நீங்கும்,

நண்பகல் யோகம் பயில கொடிய வாத நோய்கள் தீரும்,
விடியற்காலையில் யோகம் பயில பித்த நோய்கள் அகலும் என்கிறார்.
காற்றினை உள்ளுக்கு இழுப்பது “ பூரகம்” எனப்படுகிறது ,
காற்றினை வெளி விடல்  “ ரேசகம் “ எனப்படுகிறது,
காற்றினை உள் நிறுத்துதல் “ கும்பகம் “ எனப்படுகிறது.
16 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
64 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
32 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் பிராணாயாமம் எனப்படுகின்றது

இந்த முறைக்கு மாறாக வலப்பக்கம் காற்றினை உள்வாங்கி பயிலுதல் “வஞ்சனை” எனப்படும்.

இடைகலை வழியாக 16 மாத்திரை கால அளவு பூரகம் செய்து ,
பிங்கலையில் 32 மாத்திரை கால அளவு இரேசகம் செய்து மீண்டும்
காற்றினை உள்வாங்காமல் 64 மாத்திரை கால அளவு வெளி கும்பகம் செய்ய பல உண்மைகள் தெரியுமாம்.

மாத்திரை கால அளவு என்பது கண் இமைப்போது அல்லது கைந் நொடிப்பொழுது எனப்படுகிறது .

இந்த முறைகள் நன்கு தேர்ந்தவர்களாலேயே செய்யமுடியும்.

மேலும் இவைகளை எல்லாம் தேர்ந்த குருமூலமாகவே பயில வேண்டும்.
ஆரம்ப நிலையில் பயில்பவர்கள் , இதனை 

6 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
24 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
12 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் சாத்தியமாகின்றது என்றறிகிறோம் .

எப்படி என்றாலும் நன்றாக தேர்ந்த குருவின் துணை அவசியமாகின்றது . குருவின் துணையின்றி முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடது நாசியை எப்படி மூடி வலது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , கும்பகம் என்பதனை எப்படி செய்வது என்பதையும் , வலது நாசியை எப்படி மூடி இடது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , வெளி கும்பகம் எவ்வாறு செய்வது என்பதனையும் குருவின் அருகாமையில்தான் செய்ய வேண்டும் .

ஏனென்றால் குருவின் துணையின்றி இந்த பயிற்சியில் ஈடுபட்டு தோல்வி காண்பது மட்டுமல்ல , உடல் தொந்திரவுகளும் ஏற்படுவதுண்டு . ( தொந்தி , அடிக்கடி ஏப்பம் , அடிக்கடி அபானன் பிரிதல், சித்த சுவாதீனம் , பார்வை குறைபாடு போன்றவைகள் )

முறையாக பயிற்சியை பயின்றால் இதனுடைய பலன்கள் சொல்லில் அடங்காதது.

காரணம் , மனித முயற்சியினால் செய்ய முடியாத பலவிதமான சாதனைகளையும், சாகசங்களையும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம் ,ஆனால் பயில்வோரின் மனதில் முழுக்க முழுக்க தன்னலம் கருதாமையும் , மக்கள் நலனும் , உலக நன்மையை கருதும் மனோபாவமும் இருப்பது அவசியமாகும் .
==============================

No comments:

Post a Comment